பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாயத்தும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு

ஒரு ஹஜரத் கருப்பு கயிற்றை எடுத்து அதில் திருமறை வசனங்களை படித்து உஃப், உஃப் என ஊதிவிட்டு இந்த கயிறு மகத்துவமிக்கது இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக் கொண்டால் துன்பம் விலகும், சூனியம் நீங்கும், காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்! மற்றொருபுறம் தர்காஹ்வில் ரெடிமேடாக கருப்பு, சிகப்பு, மஞ்சள் நிற கயிறுகளுடன் சில அரபு வசனங்கள் எழுதப்பட்ட காகிதங்களை சயனைடுகுப்பி போன்ற வடிவத்திலோ உள்ள தாயத்தில் சுருட்டியோ அல்லது கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் கழுத்தில் கட்டும் பச்சைநிற தலையைனை போன்ற பொருளில் சொருகிவிட்டோ மக்களை நோக்கி மகத்துவமிக்க இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வார்! இவர் மக்களை தேடி செல்லமாடடார் மக்கள் இவரை நாடி வருவார்கள் உலகிலேயே மார்க்கெட்டிங் தேவைப்படாத பிஸினஸ் தாயத்து பிஸினஸ்!

அடிப்படை அறிவுகூட இல்லாத பெயர்தாங்கிகள் மந்தரித்து கொடுக்கும் தாயத்து கட்டுவதால் துன்பம் விலகுமா? அப்படி விலகுவதாக இருந்தால் மாற்றுமதத்த வர்களுடைய கோவிலில் மந்தரித்து கொடுக்கும் காப்பு கயிற்றில் கூட மகத்துவம் இருக்குமே! அப்போ அந்த கோவிலில் மகத்துவம் கொட்டுகிறது என்ற நீங்கள் மறைமுக நம்பிக்கை வைத்துள்ளீர்களா?

திருக்குர்ஆனை எவ்வாறு அணுகுவது
மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அருளிய அருள்மறை வேதத்தை பொருள் உணர்ந்து படித்தால் நேர்வழி கிடைக்குமா அல்லது அதன் வசனங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டால் நேர்வழி கிடைக்குமா? இது எவ்வாறு உள்ளது என்றால் இதோ உதாரணம்:

உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறது உடனே மருத்துவரை அணுகுகிறீர்கள் அவரும் நோய் குணமாகுவதற்காக மருந்துச் சீட்டு எழுதி அதில் உள்ள மருந்தை சாப்பிட வலியுறுத்துகிறார் ஆனால் நீங்கள் அந்த மருந்துகளை வாங்காமல் மருந்துச்சீட்டை சுருட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு நோய் குணமாகிவிடும் என்று நினைத்தால் நீங்கள் முட்டாள்தானே! ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டை உங்களால் உணர முடிகிறது அல்லாஹ் கொடுத்த அருள்மறை குர்ஆனை உங்களால் உணர முடியவில்லை!

குர்ஆனை படித்து அதன்படி நடக்க முற்பட்டால் நேர்வழி கிடைக்குமா? அல்லது அதன் வசனங்களை தங்கத் தகட்டில் எழுதி கரைத்து குடித்தாலோ அல்லது கழுத்தில் எழுதி மாட்டிக்கொண்டாலோ நேர்வழி கிடைக்குமா?

சிந்தித்துப்பாருங்கள்
ஒருவன் கயிறு திரிக்கிறான் அதன் மீது கருப்பு சாயம் ஏற்றுவதற்காக சாயப்பட்டறையில் கொடுக்கிறான் பிறகு அந்த கயிற்றுக்கு சாயம் ஏற்றப்பட்டு வெயிலில் காய வைக்கிறான்! வெயிலில் காய்ந்துக் கொண்டிருக்கும் சாயம் ஏற்றப்பட்ட கயிற்றின் மீது யார் யாரோ நிற்பார்கள், பறந்துக்கொண்டு காக்கை கூட மலம் கழித்திறுக்கும்! சாக்கடையிலிருந்து வெளியேறும் எலி கூட உணவு என எணணி நக்கிப் பார்த்திருக்கும் இப்படிப்பட்ட கயிற்றில் ஏதாவது மகத்துவம் ஏற்றப்பட வாய்ப்பு உள்ளதா?

மந்தரிக்கும் ஹஜரத்துகள் செல்போனில் சார்ஜ் ஏற்றித்தருவது போன்று சாதாரண கயிற்றில் மகத்துவத்தை ஏற்றி தருகிறார்களே  இதற்கு மாறாக மகத்துவமிக்க வசனங்களை பட்டுத்துணியால்  நெய்யப்பட்ட கயிற்றில் ஏற்றித்தரளாமே! விற்பனையாகாது என்ற பயமா? அல்லது அவர்கள் ஓதும் வசனங்கள் அதில் ஏறாதா?


தாயத்தும் மடத்தனமும்

·                    புத்தக வடிவில் இருக்கும் இறைவேதத்தை கழிவரைக்கு எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதையே காகிதத்தில் எழுதி, அதை தாயத்தில் சொருகி கழுத்திலோ இடுப்பிலோ கட்டிக்கொண்டு அதனுடன் கழிவரைக்கு செல்கிறீர்களே இது அசிங்கமாக தெரியவில்லையா?

·                    ஒயின் ஷாப்புக்குள் இறைவேதத்தை எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதே ஒயின் ஷாப்புக்கள் தாயத்து கட்டிய எத்தனை தடியர்கள் செல்கிறார்கள் அப்போ அந்த இறைவசனங்களுக்கு மதிப்பில்லையா?

·                    குழந்தைகளுக்கு இடுப்பில் தாயத்துகளை கட்டுகிறீர்களே அதற்குள் இறைவேத வசனங்கள் இருக்கின்றதே ஒருவேளை அந்த குழந்தை இரவில் படுத்து சிறுநீர் கழித்துவிட்டால் அந்த அசுத்தம் இறைவசனங்களில் தெளிக்குமே இது உங்களுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?

·                    உங்களுடைய பள்ளிச் சான்றிதழுக்கு தரப்படுகின்ற மதிப்பு கூட இந்த இறைவசனங்கள் நிறைந்த காகிதங்களுக்கு தரமாட்டீர்களா?

·                    அழகாக திருமறையை பச்சை துணியில் கட்டி கைகள் படாத இடத்தில் வைத்து ரசிக்கிறீர்கள் ஆனால் அதன்  வசனங்களை காகிதங்களில் எழுதி அதை குழந்தைகளுக்கு இடுப்புக்கு கீழே தொங்கவிட்டு ரசிக்கிறீர்கள் உங்கள் செயல்கள் உங்களுக்கு புரிய வில்லையா?

சயனைடு குப்பியும் தாயத்தும்

சயனைடு குப்பி
தாயத்து
சாதாரண மக்கள்
உபயோகிப்பது மடத்தனம்
படித்தவர்கள் கூட
உபயோகிப்பது மடத்தனம்
தற்கொலைப்படை
போராளிக்கு அழகு
இணைவைப்பாளனுக்கு
மிக அழகு
பெரும்பாலும் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள்
கழுத்தில் இடுப்பிலும்
மாட்டிக் கொள்வார்கள்
கொடியநஞ்சு கொண்டது
ஷிர்க் கொண்டது
தற்கொலைக்கு உதவும்
இணைவைப்புக்கு உதவும்
சாப்பிட்டு மரணித்தால்
ஹராம் மவுத்து
கட்டிய நிலையில் மரணித்தால் ஹராம் மவுத்து
பொதுமக்கள் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது
உலகமக்கள் பயன்படுத்த
இஸ்லாம் தடை விதித்துள்ளது
சயனைடுடன் பிடிபட்டால் அரசாங்கம் தண்டிக்கும்
தாயத்து கட்டினால்
அல்லாஹ் தண்டிப்பான்
தற்கொலையாளிக்கு
சுவர்க்கம் ஹராம்
இணைவைப்பாளருக்கு சுவர்க்கம் ஹராம்
தற்கொலையாளிக்கு
நிரந்த நரகம்
இணைவைப்பாளருக்கு
நிரந்தர நரகம்
தற்கொலையாளிக்கு
அல்லாஹ்வின்
மன்னிப்பு இல்லை
இணைவைப்பாளருக்கு
அல்லாஹ்வின்
மன்னிப்பு இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி),
நூல்:முஸ்னது அஹ்மத்
இதோ இந்த நபிமொழியை பாருங்கள்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்)  அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள். [நூல்-புஹாரி எண் 2653 ]


இந்த இறைவசனத்திற்கு என்ன அர்த்தம்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன்)
தீன்குலத் தாய்மார்களே
உங்கள் குழந்தைக்கு சிறு துன்பம் நேர்ந்தவுடன் சமாதிகளை வணங்கி, ஹஜரத்துகளிடம் தாயத்து வாங்கி கட்டுகிறீர்களே இது நியாயமா?

உங்கள் குழந்தைக்கு நேர்ந்த துன்பத்தை அல்லாஹ்விடம் முறையிடமாட்டீர்களா? அல்லாஹ்வுக்கு சிறு உறக்கமோ ஆழந்த உறக்கமோ ஏற்படாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறதே இதை உங்களால் உணர முடியவில்லையா?

அல்லாஹ்வுக்கு உங்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை சூழ்ந்து அறிகிறவன் என்பதை உங்களால் உணர முடிய வில்லையா?

மறைவானவற்றை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிந்துக் கொள்ளமுடியாது என்று திருமறையில் அடிக்கடி கூறப் பட்டுள்ளதே அதை உங்களால் உணர முடியவில்லையா?



நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 46:4)


நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)
நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! (திர்மிதி)
எழுத்துப்பிழை, தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்
அல்லாஹ் மிக அறிந்தவன்

அல்ஹம்துலில்லாஹ்

--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355
--நன்றி-சிராஜ் அப்துல்லாஹ்
: fromgn@googlegroups.com on behalf of சிராஜ் அப்துல்லாஹ் (siraj.salaam@gmail.com)
செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.” (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி),  நூல்: நஸயீ-1560)
பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இஸ்லாமியக் கலாசாரம் கிடையாது. மாறாக, யூத, கிறிஸ்த்தவ கலாசாரமாகும். ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்களில் சிலர் ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் சத்திய மார்க்கத்தைக் களங்கப்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு அநாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர். கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை தன்னிகரில்லா உயரிய வழிகாட்டலினை வழங்கி நிற்கும் இறைமார்க்கமாம் இஸ்லாம் புனித மாதங்கள் விடயத்தில் என்ன கூறுகின்றது என நோக்குவோம்.
ரபீஉல் அவ்வல் புனித மாதமா?
புனித மாதங்கள் குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.”  (அல்குர்ஆன் 09:36)
அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி- -3197)
எனவே, ரபீஉல் அவ்வல் மாதத்திற்கு என இஸ்லாத்தில் எந்த புனிதமும் இல்லை என மேலுள்ள வஹியின் வாசகங்களிலிருந்து மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபிகளார் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை
ஒரு முஸ்லிம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்காத வரை அவனுடைய ஈமான் பூரணமடையாது. இது குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
“நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.”  (அல்குர்ஆன் 33:06)
இது குறித்து அருமைத் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
“உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார் என்று  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-15)
மீலாது கொண்டாட்டத்தின்  தோற்றம்
இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் பாத்திமா(ரழி) அவர்களின் பரம்பரையினர் எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி (ரழி) அவர்களே நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள் என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் கூறக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’  எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி(ரழி), ஹுசைன் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோரின் பெயரிலும்,  ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாது விழா (பிறந்த நாள்) கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.
கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் மீலாதுக் கொண்டாட்டமும்
கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். அதாவது: நமது பரிபாஷையில் சொல்வதனால் இறைத்தூதுர் ஈஸா (அலை) அவர்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்கள். மீலாத் விழாக் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் உண்மையில் நியாயமானவர்களாக இருந்தால் நபிமார்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது மீலாது விழாவுடன் இணைத்து கிறிஸ்மஸ் பண்டிகையையும் கொண்டாட வேண்டும்.
நபிகளாரை நேசிப்பது எப்படி?
அருள்மறையாம் திருமறை கூறுகின்றது. “நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!” (அல்குர்ஆன் 03:31)
அழ்ழாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது, சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.

மேலும், திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.”  (அல்குர்ஆன்-4:59)
“அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” (அல்குர்ஆன்-24:51)
மீலாது கொண்டாட்டம் வழிபாடல்ல! வழிகேடு!
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித கூட்டலும், குறைத்தலும் இன்றி தனது தூதுத்துவப் பணியை மிகச் சரியாக நிறைவேற்றிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீலாது கொண்டாட்டம் மார்க்கத்தில் உள்ள விடயமாக இருந்திருந்தால் நிச்சயமாக அதனை நமக்கு கற்றுத் தந்திருப்பார்கள். ஆனால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கோ, தமக்கு முன்சென்ற இறைத்தூதர்களுக்கோ மீலாது விழாக் கொண்டாடவுமில்லை. கொண்டாடுமாறு கட்டளையிடவுமில்லை. இந்நிலையில், மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என ஒருவர் வாதிடுவாராயின் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது விழா போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தராது விட்டுவிட்டார்கள் என்பதாகிவிடும். மேலும், அருளாளன் அழ்ழாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)
மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப் படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த தலைமுறை என சிலாகித்துக் கூறப்பட்ட உத்தம நபித்தோழர்கள் காலத்திலோ, அதற்கடுத்து வந்த தலைமுறையினர்களது காலத்திலோ மீலாது விழா என்கின்ற அநாச்சாரம் இருந்ததில்லை. இதோ அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 “உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2651)
மீலாது விழா ஏன் கொண்டாடக் கூடாது?
01. நாம் மீலாது விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது மறதி உட்பட அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்ட, முக்காலமும் உணர்ந்த அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிப்பது போன்றதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
எனவே, மீலாது விழாக் கொண்டாட்டம் என்கின்ற அநாச்சாரத்தை அரங்கேற்றி அழ்ழாஹ்வுக்கு பாடம் கற்பிக்க முனைவோமாயின் அது எம்மை கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிற்கு இட்டுச் செல்லும்.
02.மீலாது விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணியில் குறை காண வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால், ஆதாரபூர்வமான நபிமொழிகள் இதற்கு நேர்எதிராக சான்று பகர்கின்றன.
‘அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். மக்கள் அழ்ழாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு இது ‘நஹ்ர்’ உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபியவர்கள், இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும், உங்கள் செல்வங்களும், உங்களது மானமும், உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி! என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)
03.பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் யூத, கிறிஸ்த்தவ சமுதாயக் கலாசாரமாகும். இது குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி),  நூல்: அபூதாவுத்-4033)
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில்,
“உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அழ்ழாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் ‘வேறெவரை’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூசயீது அல் குத்ரீ (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-3456)
மீலாதும் நரக நெருப்பும்
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அழ்ழாஹ்விற்கும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் பாடம் கற்பிப்பது போன்று, (அழ்ழாஹ் இத்தகைய செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக!) இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாது கொண்டாட்டம் எம்மை நிச்சயமாக கொழுந்து விட்டெறியும் நரக நெருப்பிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும்.
இதோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறுகின்றார்கள்:
 “செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.”  (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)
“அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.” (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
பகிரங்க விவாத அழைப்பு
மீலாது, மவ்லீது, தாயத்து, தட்டு, தகடு, கத்தம், பாத்திஹாக்கள், தரீக்காக்கள், மத்ஹபுகள், கந்தூரி, கொடியேற்றங்கள், கப்று வணக்கம், அழ்ழாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல் போன்ற அநாச்சரங்கள் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்ற எந்த மார்க்க அறிஞராவது வாதிடுவார்களாயின் அவர்களோடு அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற தூயமூலாதாரங்களின் அடிப்படையில் பகிரங்க விவாத்திற்கு இத்தாள் அழைப்பு விடுக்கின்றோம்
இறுதியாக, குளிக்கச் சென்று சேற்றை அள்ளிப் பூசிக் கொண்ட கதையாக, மீலாது விழா போன்ற, கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிற்கு எம்மை இட்டுச் செல்லக் கூடிய அநாச்சாரங்களிலிருந்து முற்றுமுழுதாக மீண்டு, இஸ்லாத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து அழ்ழாஹ்வின் மார்க்கத்தை உரிய முறையில் விளங்கிப் பின்பற்றி வெற்றிபெற்றிட அருளாளன் அழ்ழாஹ் எமக்கு அருள்பாலிப்பானாக!
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகம் முழுவதும் மாவட்டத்தின் சார்பாக இறைஇல்லங்களில் மவ்லிதை தடை செய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கடிதங்கள் அனுப்பட்டு வருகின்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக சுமார் 45 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கபட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய கடிதத்தின் மாதிரி (PDF வடிவில் டவுன்லோடு செய்ய கீழே பார்க்கவும்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)
அன்புக்குரிய பள்ளிவாசல் ஜமா-அத் நிர்வாகிகளுக்கு,
இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபிகள் நாயகத்தை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.
மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான். ஏனெனில், நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்:
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)
எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
(குறிப்பு: இத்துடன் மவ்லூது வரிகள் திருக்குர்-ஆன் வசனங்களோடு எவ்வாரெல்லாம் மோதுகின்றன என்ற பிரசுரத்தையும் இணைத்துள்ளோம். பார்வையிடவும்)
இப்படிக்கு,
தங்கள் இம்மை மறுமை நலன் நாடும்,
மாவட்டத்தலைவர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்
நன்றி-TNTJ.NET
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!
சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
‘மவ்லித்’ என்பதின் பொருள்
‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 8)
மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.
”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)
செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?
”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.
”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.
”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)
மலக்குகளின் வருகை
”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)
மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.
ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
தொகுப்பு:-எம்.ஐ சுலைமான்
நன்றி-=TNTJ.NET

ஆவி இருக்கு என நம்பினால் ஷிர்க்கில் விழுந்து விடுவீர்கள் (எச்சரிக்கையாக இருக்கவும்)
·                    ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும்
·                  ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு வரும்!
·                 ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்!
·                    தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா,  சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்!
·                   இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!
 இயற்கை மரணமும் மூட நம்பிக்கையும்
உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆவி கொள்கையில் ஒருமித்த கருத்தை முன்மொழிகின்றன அதாவது ஒருவன் வாழக்கூடிய வயதை முழுமையாக வாழந்து இயற்கையாக மரணித்துவிட்டால் அவனுடைய சரீரம் ஆத்மாவை வெளியேற்றுகிறதாம் இவ்வாறு வெளியே வரும் ஆத்மாவை நேரடியாக சுவர்க்கலோகம் சென்றுவிடுமாம்! அன்றுமுதல் அவன் சுவர்க்க லோக பதவியை அடைந்துவிடுகிறானாம்! நிம்மதியாக வாழ்கிறானாம் மீண்டும் மறுபிறவி எடுத்து வருவானாம்!
தற்கொலையும் மூட நம்பிக்கையும்
ஒருவன் விபத்தின் மூலமாகவோ அல்லது விஷம் அருந்தியோ, தூக்கு மாட்டியோ அல்லது இன்ன பிற வழிகளின் மூலமாகவோ தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டால் அவனது சரீரம் ஆத்மாவை வெளியேற்றிவிடுகிறதாம் ஆனால் அந்த ஆத்மா மரணம் விதியாக்கப்படுவதற்கு முன்  வெளியேறிவிடுவதால் சுவர்ககலோகத்திற்குள் பிரவேசிக்காதாம்! அவன் வாழக்கூடிய வாழக்கையின் எஞ்சிய காலம் முழுவதும் இந்த உலகிலேயே சரிரம் இல்லாமல் வாழ வேண்டுமாம் இதற்கு பெயர்தான் ஆவியாம்!
ஆவி எப்படி இருக்கும்? இதோ சில குருட்டு நம்பிக்கைகள்
·                    ஆவியின் உடல் முழுவதும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போன்று இருக்குமாம்!

·                   ஆவிக்கு இரண்டு கண்கள் இருக்குமாம்!

·                    நீண்ட மூக்கும், நாயைப் போன்ற நாக்கும் இருக்குமாம்!

·                    தலையில் கருமை நிற மயிர் முளைத் திருக்குமாம்! இந்த மயிர் பின்னங்கால்கள் வரை நீண்டு இருக்குமாம்!

·                    கைவிரல்கள் அனைத்திலும் நகங்கள் குறைந்தது 4 இஞ்சுக்கு வளர்ந்திருக்குமாம்!

·                    ஆவிக்கு கால் பாதங்கள் இருக்காதாம்

·                    ஆவி காற்றில் மிதந்தபடி அங்கும் இங்கும் அலையுமாம்!

·                    ஆவிக்கு கடுமையான பசி ஏற்படுமாம் அப்படிப்பட்ட நேரத்தில் தனக்குப் பிடித்தமானவருடைய உடலுக்குள்ளும் நுழைந்துவிடுமாம் பசி தீர பிரியாணி, முட்டை, சாராயம் மற்றும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுமாம்!

·                    மந்திரவாதிக்கு மட்டும்தான் ஆவி கட்டுப்படுமாம்!

·                    ஆவி எப்போதும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தில்தான் அதிகம் தங்குமாம்!
 ஆவி யாருக்கு பிடிக்கிறது!
சமுதாயத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் பேய், பிசாசு பிடிப்பதில்லை மாறாக ஏழைகளுக்குத்தான் இந்த பேய் பிசாசு எல்லாம்! அதிலும் ஏழைகளில் வாழ்க்கையை எதிர்த்துப் போராட மன வலிமையற்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பேய் பிசாசு பிடிக்கிறது! இதற்கான காரணம் என்ன?

அப்பாவி மக்களின் அறியாமையும் வேதனையும்
குடும்ப வருமானம் குறைந்து வியாபார இழப்புகள் அதிகமாக இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அதை எண்ணி வருந்துபவருக்கு பைத்தியம் பிடிக்கலாம்! இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க கூட குடும்பத்தாருக்கு வசதிகள் இருக்காது மேலும் இப்படிப்பட்ட மன நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு அலட்சியம் பார்க்கிறார்கள் எனவேதான் வசதியற்றவர்கள் மன நோய் என்பதை அறிந்தும் சமுதாயத்தின் முன் கேவலப்படக்கூடாதே என்று பேய் பிசாசு என்று கூறி அனுதாபத்தை தேடுகிறார்கள்.
சுயநலவாதிகளின் ஆவி நாடகங்கள்
·                    வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதியிருக்கும் ஆனால் கடனை திருப்ப மனம் இருக்காது, இப்படிப்பட்ட நாடகதாரிகள் கடன்தாரரிடம் அடிக்கடி சாக்கு போக்குகளை கூறுவார்கள் இறுதியில் கடன்காரன் நெருக்கடி கொடுத்தால் உடனே ஆவியாட்டம் போடுவார்கள் கடன்காரனும் மிரண்டுவிடுவான்! கடன்தாரர் பரிதாபப்பட்டு சற்று அடங்கி விடுவார்!

·                    திருமணம் ஆகாத நிலையில் வாழும் ஒருசிலர் திருமணத்திற்காக நாடகம் ஆடுவார்கள்! குறிப்பாக காதலர்கள் ஆடும் ஆவி ஆட்டத்திற்கு அளவில்லை! தனக்கு மணமகன் பிடிக்கவில்லை என்று கூற ஆவியாட்டம் போட்டு பெற்றோரை ஏமாற்றலாம்!

·                  வேலைக்கு செல்ல உடல் வலிமை இருந்தும் குனிந்து வேலை செய்ய விரும்பாத ஒருசிலர் ஜாலியாக ஊர் சுற்ற  நாடகம் ஆடுவார்கள்!

பேய் பிசாசு மூலம் வசூல் வேட்டைகள்
·                    ஒருசில தெருக்களில் கோவில் இருக்காது உடனே அங்கு அம்மன் வந்துவிட்டதாக நாடகமாடி மக்களிடம் கோவில் கட்ட நாடகமாடுவார்கள்!  பஜனை, ஆராதணை மற்றும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு

·                   ஒரு சில பகுதிகளில் தர்கா இருக்காது உடனே ஏர்வாடி இப்ராஹீம் ஷா அவ்லியா கனவில் வந்துவிட்டார் என்று ஆவியாட்டம் போட்டு இங்கே ஒரு தர்காஹ் கட்டி சந்தன ஊர்வளம் எடுக்க ஆணையிடுவார்கள்! இறுதியாக ஒரு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி அதற்குள் செங்கல் வைத்துவிட்டு அதை அவ்லியாவின் சமாதி என்று ஃபாத்திஹா ஓதுவதும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு! (இது சேலம் பகுதியின் உண்மைச் சம்பவம்)

·                    குறிப்பிட்ட நசாராக்களின் தேவாலயங்களில் ஆவிகளுக்கு சிறப்பு பிராத்தனையும் சாட்டை அடியும் கொடுக்கப் படுகிறது!

·                   பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் இடித்து சாலை அமைக்க முற்பட்டால் அதை தடுப்பதற்காக அவ்லியா ஆவி மற்றும் அம்மன் ஆவிகள் என்று ஏராளமான ஆட்டங்கள் தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறுகின்றன.
வரலாற்று ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?

·                    ஹிட்லர் எத்தனையோ இலட்சம் பேரை கொன்று குவித்தான் ஒருவருடைய ஆவியும் அவனை பிடிக்க வில்லை ஏன்?

·                    1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் இதுநாள் வரை அவருடைய ஆவி யாருக்கும் பிடிக்கவில்லை ஏன்? தற்கொலை செய்துக்கொண்ட ஹிட்லருக்கு பசி எடுக்காதா?

·                    2வது உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து  ஹிரோசிமா? நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. ஹிரோசிமா நகரில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள். இந்த 2,14,000-ம் ஆவிகளில் குறைந்தபட்சம் 1 இலட்சம் பேருக்காவது பிடித்திருக்க வேண்டும் ஏன் பிடிக்கவில்லை?

·                    ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி போன்றோர் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆவி யாருக்கும் பிடிக்கவில்லையே ஏன்?

திறமைவாய்ந்த ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?
·                    அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவி
·                    சட்டம் படித்த வக்கீல் மற்றும் நீதிபதியின் ஆவி
·                    விமான பைலட் ஆவி

மக்களுக்கு வக்கீலுடைய ஆவி பிடிப்பதில்லை அதே போன்று நீதிபதி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவருடைய ஆவிகள் பிடிப்பதில்லை ஏன்? சிந்தித்துப்பாருங்கள் இப்படிப்பட்ட நிபுனர்களின் ஆவி பிடித்ததாக நாடகமாடினால் மருத்துவ உடல் கூறுகள் பற்றி பேச வேண்டிவரும், சட்டத்தின் சரத்துக்கள் பற்றி பேச வேண்டிவரும், விமானம் ஓட்டும் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிவரும் எனவேதான் படிப்பறிவற்ற ஆவிகளை தேர்ந்தெடுத்து உடலில் ஆவி புகுந்துவிட்டது என்று தெளிவாக நாடகம் ஆடுகிறார்கள்!
இவர்களுக்கு ஏன் பேய், பிசாசு பிடிப்பதில்லை?
·                    நாள்தோறும் சுடுகாட்டில் பிணங்களை எறிக்கும் வெட்டியானுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா? இந்த மனிதன் அங்கே தானே வாழ்கிறான்!

·                    கப்ருஸ்தான்களில் வீடுகட்டி வாழும் முஸ்லிம் ஏழைகளுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா?

·                    தமிழனுக்கு சிங்கள ஆவிதான் அதிகம் பிடிக்கிறது ஏன் ரஷ்ய ஆவி, ஜப்பான் ஆவி, கொரிய ஆவி பிடிப்பதில்லை!

·                    தமிழனுக்கு மலையாள ஆவி பிடிக்கிறது உடனே அரபு வசனங்களை தெளிவாக ஓதுகிறானாம் ஏன் மராட்டிய ஆவி பிடிப்பதில்லை பகவத்கீதையை கஷ்டமான சமஸ்கிருத மொழியில் பேச வேண்டிவருமே என்ற பயமா?

·                    1 முதல் 10 வயது பச்சிளங்குழந்தைகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை அதே சமயம் 60-70 வயதை தாண்டிய கிழடுகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை!

·                    வர்த்தக ரீதியில் சிறந்தவர்களாக கருதப்படும் ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

·                    அரசியல்வாதிகள், தலைசிறந்த ஆசிரியர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

·                    கொலை நடந்த ஸ்பாட்டுக்கு இரவு பகலாக காவல் இருக்கும் காவலர்களுக்கு ஏன் அந்த ஆவி பிடிப்பதில்லை? தற்கொலை செய்துக்கொண்டவர்களை போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

·                    ஜனாஸாக்களை குழிப்பாட்டுபவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

·                    ஃபிர்அவ்ன் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அவனுடைய சடலத்தை மியுசியத்தில் வைத்துள் ளார்களே அந்த சடலத்துக்குள் ஏன் எந்த ஆவியும் நுழையவில்லை? குறைந்தபட்சம் ஃபிர்அவ்னுடைய ஆவியாவது நுழையலாமே ஏன் முடியவில்லை?

 ஆவியை பார்த்தேன் பயப்படுகிறேன்???
மனிதன் பயந்த சுபாவமுள்ளவன் எளிதில் பயப்படுவான்.  நம்மில் பலர் ஆவியை பார்த்ததாக கூறுவார்கள் பெரும்பாலும் இவ்வாறு கூறுபவர்கள் ஆவியை இருட்டில் பார்த்ததாகத்தான் சொல்வார்கள் காரணம் இருட்டில்தான் ஆவி அங்கும் இங்கும் அலையுமாம்!

இரவு நேரத்தில் ஆவி வந்து பயமுறுத்துமாம், அடித்துவிடுமாம் அப்படியானல் ஏர்வாடி தர்காஹ்வில் ஆயிரக்கணக்கான ஆவிகள் பகலில் அலைகிறதே அந்த ஆவிகளுக்கு உடலும் இலவசமாக கிடைத்துள்ளதே அப்போது அந்த ஆவிகள் உங்களை பயமுறுத்துகிறதா? அடிக்கிறதா? மிதிக்கிறதா? உண்மையில் ஆவி பயம் என்பது முட்டாள்தனம்!
 ஆவி, காத்து கருப்பு அடிக்குமா?
இரவு நேரத்தில் மரங்கள் ஆக்ஸிஜனை வெளியேற்றி கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன அந்த நேரத்தில் நீங்கள் அங்கே சென்றால் அந்த விசக்காற்றின் தாக்கத்தால் மூர்ச்சையாகிவிடுவீர்கள், மயக்கம் வரும் இது அறிவியல் உண்மை ஆனால் இதை உணராத மக்கள் இரவு நேரத்தில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி விழுந்துவிட்டால் ஆவி அடித்துவிட்டது, காத்து கருப்பு ஒண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள். இரவில் மரங்களினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்ஸைடின் தாக்கம் அதிகாக இருந்தால் அதை நாம் நுகர்ந்துக் கொண்டால் நம் மூளை தாக்குப்பிடிக்குமா? மூளை குழம்பிப் போகாதா? அந்த நேரத்தில் நம்மை அறியாமல் உளரல்கள் வருவது இயல்புதானே இதை ஏன் சிந்திப்பதில்லை! இரவு நேரத்தில் மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் அதே சமயம் மழைக்காலங்களில் பகலில் கூட மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் தலையில் இடி கூட விழுந்துவிடலாம்!

 ஆவி பயம் உருவாக்கப்படுகிறது!
பேய் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் எந்த படத்திலாவது சவுண்டு எஃபக்ட் இல்லாத பேய் சினிமா வருகிறதா? படத்தில் ஆவி வரும்பொதெல்லாதம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திக் திக் சத்தம்தான் வரும், கதவு இழுப்பது போன்ற ஓசை சப்தம் வரும், சன்னல் படபட வென்று அடிப்பது போன்ற சத்தம் வரும் இதெல்லாம் மனிதனை மிரளவைக்கும் மீடியாக்களின் சதித்திட்டம்! இதே ஆவி சினிமா படத்தை சப்தமே இல்லாமல் ஊமை படமாக பாருங்கள் எந்த பயமும் வராது காரணம் மனிதனை சினிமா ஊடகம் தனக்குள் மயக்குகிறது! குழந்தைகள் இந்த சினிமாக்களை பார்த்துவிட்டால் இரவு முழுவதும் நடுங்கும் எலி ஓடினால் கூட ஆவி என்று கூறும்! இது மீடியாக்களின் துரோகமில்லையா?
 அமெரிக்கர்கள் நிஜமான ஆவியை கேமராவில் பிடித்ததாக கூறுவார்கள் இதோ கேமிராவில் ஆவி படம் எவ்வாறு வருகிறது? சுய பரிசோதனை செய்து பார்ப்போமா!
இருட்டில் ஒரு கேமிராவை எடுத்துக்கொள்ளுங்கள் ஃபிளாஷ் லைட் போட்டதும் கேமிராவை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே படம் எடுங்கள் அப்போது இடையில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் காட்டுங்கள் கேமிராவின் அசைவும், பிளாஷ் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பிறகு அந்த வெளிச்சம் பிளி்ம் ரோலில் பதிவாகிவிடும் போட்டோ பிரிண்ட்-ல் ஆவி போன்று தோற்றம் இருக்கும்! இது ஒருசில அமெரிக்கர்களின் முட்டாள்தனம் என்று கூறலாமே!
திடீர் மரண புள்ளிவிபரங்களும் ஆவிகளும்
தமிழகத்தில் ஆண்டுதோறும்
சாலை விபத்துக்கள் விபரம்
பலியானவர்கள்
ஒரு ஆண்டில் சராசரியாக
51,000
விபத்துக்களால் உயிரிழப்பு
10,000
ஒரு நாளைக்கு சாலை விபத்துகள் (Average)
140
ஒரு நாளைக்கு விபத்துகளால உயிரிழப்பு (Average)
27


தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் அதாவது 2009ல்
சாலை விபத்துக்கள் விபரம்
பலியானவர்கள்
ஒரு ஆண்டில் சராசரியாக
60,409
விபத்துக்களால் உயிரிழப்பு
12,784
ஒரு நாளைக்கு சாலை விபத்துகள் (Average)
165
ஒரு நாளைக்கு விபத்துகளால உயிரிழப்பு (Average)
35


சென்னையில் 2010ல் மட்டும்
சாலை விபத்துக்கள் விபரம்
பலியானவர்கள்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா தியேட்டர் முதல் அண்ணா ஆர்ச் விபத்துகளால உயிரிழப்பு
17
கிழக்கு கடற்கரை சாலையில், பாலவாக்கம் முதல் வெட்டுவாங்கேணி வரை நடந்த விபத்தில்
13
ஐ.டி., காரிடர் எனப்படும் ராஜிவ்காந்தி சாலையில் நடந்த விபத்தில்
11
சென்னையின் 23 சாலைகளில் மட்டும்
174
அதிக உயிரிழப்பு பதிவான காவல் நிலைய பகுதி
சென்னையில் மெரீனா கடற்கரை சாலை அமைந்துள்ள அண்ணா சதுக்கம் மற்றும் திருமங்கலம் போலீஸ் எல்லையில் அதிக அளவில் விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன
நன்றி http://www.sankamam.com
தற்கொலைகள் விபரம்
மரணிப்பவர்கள்
2007 ஆண்டு இந்தியாவில் மட்டும் தற்கொலைகள்
1,22,637
2007 ஆண்டு இந்தியாவில் பெண்கள் தற்கொலை
43,342
மஹாராஷ்டிராவில் மட்டும் கடன் தொல்லையால்
15,184
ஆந்திராவில் மட்டும் கடன் குடும்ப பிரச்சினையால்
14,882
தற்கொலையில் இளைஞர்கள் பங்கு (3:1)
3க்கு 1
தற்கொலையில் குடும்ப பெண்கள் பங்கு (5:1)
5க்கு 1
ஒரு மணி நேரத்துக்கு தற்கொலை எண்ணிக்கை
14 பேர்
(Average)
ஆதாரம் http://www.thinaboomi.com

முடிவுரை
ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் பேர் விபத்து மற்றும் தற்கொலைகளின் மூலமாக மரணிக்கிறார்கள் இவர்கள் ஆவியாக உருவெடுத்து வருவார்களானால் மாதம் 1000 பேருக்கு ஆவி பிடிக்க வேண்டும்! ஆனால் ஏன் ஒரு சிலருக்கு பிடிக்கிறது! ஒரு ஆவி பல உடல்களில் புகலாம் எனில் இந்த 1000 ஆவிக்கள் பல இலட்சம் உடல்களை அபகரிக்கலாமே வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமாவது நடந்துள்ளதா? ஆவி என்பது இல்லை? ஆவி பிடிக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் நல்ல டாக்டரிடம் சென்று மனநல வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டும்!
 ஆவி எனும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு எச்சரிக்கையாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக! 
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி-சிராஜ் அப்துல்லாஹ்