தமிழ் முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.


மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்

எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மை யளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘அல்லாஹ் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)

‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: முஸ்லிம் (3541)
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh (ரலி) நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும் முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த அப்துல்காதிர் ஜீலானி என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.