திரு மறை குர்ஆன் இறக்கப்பட்ட காரணங்களை இறைவனே திரு மறையின் பல்வேறு வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
இந்த வேதம் பயபக்தி உடையோருக்கு நேர்வழி காட்டியாகும். (2:2)
இது அகிலத்தாருக் கெல்லாம் உபதேசமாகும்.(81:27)
அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன் மாராயமாகவும் இருக்கின்றது.(46:12)
ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்வதற்கு இறக்கப்பட்டதாகச் சிலர் ஒதுக்கி வைத்து விட்டனர்.
திரு மறையின் ஓர் இடத்தில் கூட, இது இறந்தவர்களுக்கு ஓதுவதற்கு அருளப்பட்டதாகக் கூறப்படவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்யும்படிக் கூறவில்லை.
மார்கத்தின் எந்த ஒரு செயலும், அல்லாஹ் திருமறையில் அறிவித்ததாகவோ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ இருக்க வேண்டும். நாமாக நம் விருப்பப்படி எதையும் முடிவு செய்யக் கூடாது.
குர்ஆன் ஓதுவது நன்மை தான். அதில் சந்தேகமேயில்லை.ஆனால் இறந்தவர்களுக்கு ஓத - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓத மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்றால், இல்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட ஏராளமானோர், நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மரணித்துள்ளனர். அவர்களில் யாருக்கேனும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி ஹதியாச் செய்ததாக எந்த ஹதீஸிலும் காணப்பட வில்லை.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எந்த ஒரு நபித் தோழரும் அவர்களுக்காக குர்ஆன் ஓதியதாக ஆதாரம் இல்லை.
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு காரியத்தை எவரேனும் செய்தால் அது ரத்து செய்யப்படும். என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி)
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து