மதீனாவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு, மக்கள் மறந்திருக்கும் சமயங்களில், அவ்வப்போது ஒரு பிரசுரம் சில விஷமிகளால் வெளியிடப்படும். அதில், மதீனாவில் வசிக்கும் ஷேக் அஹமத் தெரிவிப்பது என்னவென்றால், நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு கண்டேன்.... என்று துவங்கி ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பிரசுரத்திலும் அவரவர் மனதில் தோன்றியதை சேர்த்தும் குறைத்தும் எழுதிவிட்டு, இது போல் 1000 பிரதி அச்சிட்டு வெளியிட்டால், நினைத்தது நடக்கும். செல்வம் பெருகும். பம்பாயில் ஒருவர் அச்சிட்டு வெளியிட்டார். கோடீஸ்வரர் ஆனார். கல்கத்தாவில் ஒருவர் கிழித்துப் போட்டார். கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்.என்றெல்லாம் ரீல் விடப்பட்டிருக்கும்.
இதைப் படித்து விட்டு,பணக்காரர் ஆகலாம் என்று இது போல் அச்சிட்டு வெளியிட்டு ஏமாந்தவர் பலர். இதை மறுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அல்லாஹ்வை மறந்து அஞ்சியவர் பலர்.
இந்தப் பித்தலாட்டப் பிரசுரங்களில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. அச்சிட்டு விநியோகிக்கக் கூறப்படும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை.
ஆரம்ப காலத்தில் மக்காவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு இப்பிரசுரம் வெளியானது. அதில் 'நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்று தொடங்கியதைப் பார்த்து ரவுலா ஷரீப் மதீனாவில் அல்லவா உள்ளது? என்று சிலர் கேட்க - அடுத்தடுத்த பிரசுரங்களில் மாற்றிக் கொண்டார்கள். இதிலிருந்தே மக்காவுக்கும் மதீனாவுக்கும் வித்தியாசம் தெரியாத எவனோ ஒரு மடையன் எழுதியுள்ளான் என்பதை உணரலாம்.
'ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்ற வாசகமும் பொய்யானது. ஏனனில் ரவுலா ஷரீபில் யாரையும் தூங்க அனுமதிப்பதில்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் ரவுலா ஷரீபை ஸியாரத் செய்து விட்டு வந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். பல்வேறு தர்காக்களைப் பார்த்துப் பழகிப் போனவர்கள் அதே கண்ணோட்டத்தில் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தையும் கருதி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை அல்லாஹ் எல்லா அசுத்தங்களிலிருந்தும் பாதுகாத்து வைத்திருக்கின்றான்.
ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை 60 ஆயிரம் முஸ்லிம்கள் இறப்பதாகவும், அதில் ஒருவருக்குக் கூட ஈமான் இல்லை என்பதாகவும் அப்பிரசுரத்தில் ரீல் விடப்பட்டுள்ளது.
ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. இன்னும் இது போன்ற ஏராளமான தவறுகள் அப்பிரசுரத்தில் காணப்படுகின்றன. இதே போன்ற பிரசுரம் திருப்பதியின் பெயரால் ஒரு சாராரும், வேளாங்கன்னியின் பெயரால் ஒரு சாராரும் வெளியிடுகின்றனர். அவற்றின் ஆரம்பத்தில் காணப்படும் செய்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் - இறுதியில் காணப்படும் எச்சிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இதிலிருந்தே இவை திட்டமிட்டு கட்டி விடப்பட்ட கதைகள் என்பதை உணரலாம்.
இது போன்ற முட்டாள்தனமான பிரசுரங்களில் ஈமானை இழக்காமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக. இறுதியாக, பெருமானார் (ஸல்) அவர்களின் ஓர் எச்சரிக்கை : யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி)
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து