உடல் நில சரியில்லை என்றால், உரிய மருத்துவம் செய்ய வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டுச் சிலர், மந்திரவாதிகளையும், மலையாளத் தங்கள் களையும் அணுகிப் பரிகாரம் தேடுகின்றனர்.
ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்களுக்கு இவர்களைக் கண்டால் கொண்டாட்டம் தான். 'நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை, எல்லா வகையான மருத்துவமும் பார்த்தாகி விட்டது' என்று இவர்களே வாக்கு மூலம் கொடுக்க - சரியான இளிச்சவாயன் கிடைத்து விட்டான் என்று மந்திரவாதி அசரத்துகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. 'உங்களுக்கு செய்வினை செய்யப் பட்டுள்ளது' 'நீங்கள் எந்த டாக்டரைப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை' என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கொஞ்சம் செலவு ஆகும் என்று அவர் தனது முதல் வியாபாரத்தை ஆரம்பிக்க - கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து - கடனும் வாங்கிகிச் செலவு செய்துக் கடைசியில் கண்ட பலன் ஒன்றும் இருக்காது. இழந்தது பணத்தை மட்டுமல்ல, ஈமானையும் கூட என்பதை இந்தப் பாவிகள் உணர மாட்டர்கள்.
யாரோ யாருக்கோ செய்து வைத்தது இவனுக்கு எப்படித் தெரியும்? என்பதைக் கூட இந்த மூடர்கள் சிந்திப்பதில்லை. இவர்களுக் கெல்லாம் தலையில் மூளைக்கு பதில் வேறு என்னவோ இருக்கின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
செய்வினை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னவன் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டான். அவனது ஈனத்தனமான பிழைப்பும் வருமானமும் தொடர வேண்டுமே! 'உங்களுக்கு வேண்டியவர் - உறவினர் தான் செய்து வைத்திருக்கிறார்கள்' என்று அந்த அயோக்கியன் சொல்ல - தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், இப்படி ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டு வீண்பழி சுமத்தி, இதன் காரணமாக நெருங்கிய சொந்த பந்தங்கள், உடன்பிறந்தவர்,அண்டை அயலார், அனைவர் மீதும் பகைமைகொண்டு பிரிந்து போன குடும்பங்கள் எத்தனையோ!
ஒரு தாய் வயிற்றில் பிறந்து - உயிருக்குயிராய் நேசித்து அன்பு செலுத்தி - ஆதரவாய் அணுசரனையாய் இருந்த சகோதர சகோதரிகள் கூட, கண்ட கண்ட கழிசடைகளின் பேச்சையெல்லாம் நம்பி, செய்வினை என்னும் பொய் வினையில் மூழ்கிப் போய் இரத்த பந்தங்களை முறித்துக் கொள்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு கூறும். யார் என்னை சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். என்னை யார் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.
யாரும் யாருக்கும் எதுவும் செய்யலாம் என்று நம்புபவர்கள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், எதிராகச் செய்து வைக்க வேண்டியது தானே! செயல்பட முடியாமல் கை கால்களை முடக்க வேண்டிளது தானே!
பதவிப் போட்டியிலும், அரசியல் போட்டியிலும், தொழில் போட்டியிலும், ஒருவரையொருவர் வீழ்த்த தங்கள் ஆற்றலையும் திறமையையும், பொருளாதாரத்தையும், வீணடிப்பதை விட்டு விட்டுச் செய்வினையையும், பில்லி சூனியத்தையும் பயன்படுத்த வேண்டியது தானே! இவை அனைத்தும் எமாற்று வேலை என்பதற்குச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களுக்கு - இந்த உதாரணங்கள் போதும்.
-----------------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து