“தன் அடியாரை (முஹம்மதை) (கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ்) என்ற மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஓரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர்ஆன் 17:1)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்ககின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிஃராஜை” கட்டாயம் நம்பியே ஆக வேண்டும்.
இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ” அவர்கள் “துல் கஃதா மாதத்தில் ஏற்பட்டது” என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக, நபி தோழர்கள் ஜாபிர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27ல் நடந்தது” என்கிறார்.
மிஃராஜ் எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.
ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லி இருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவுவைத்திருப்பாாகள். இரண்டு, மூன்று அபிப்பிராயங்களை கொண்டிருக்க முடியாது.
ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷுரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்பவேண்டும் அவ்வளவுதான். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) ஜாபிர் (ரழி) உாவா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.
பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபிவுல் அவ்வலை விட்டுவிட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27″ ஐ தேர்ந்தெடுத்த மர்மம் என்ன? இதனை நாம் சிந்திக்க வேண்டும். சொறிபொழிவாளர்கள் இதனை வலியுறுத்திக் கூறக் காரணம் என்ன?
ரபிவுல் அவ்வலில் தான் மிஃராஜ் நடந்தது என்று கூறினால் அதில் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மீலாது விழாக்கள் என்று தனி வியாபாரம். பிறகு ரஜபில் மிஃராஜ் விழாக்கள் என்று இன்னொரு வியாபாரம். இப்படி இரண்டு மாதங்களிலும் வந்து கொண்டிருக்கும் வருமானம் பாதிக்கும். ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் என்பதை மக்களுக்குச் சொன்னால் மீலாத் மிஃராஜ் இரண்டுக்கும் ஒரு விழா நடத்தி போதுமாக்கிவிடுவார்கள். ரஜபு மாதம் வருவாயற்றுப் போய்விடும். எல்லா மாதங்களிலும் பயான் பாதிஹா என்று வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வித வருமானமுமில்லாமல் இருந்த ரஜப் மாதத்தில் மிஃராஜ் நடந்ததாக மக்களை நம்ப வைத்தார்கள். அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்
இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல்” கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இதுதான் புராக் என்று விற்பது ஒரு பக்கம். அதனை வீகளில் மாட்டிக் கொண்டு தாங்களே மிஃராஜ் சென்று விட்டதாக பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜ் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்கள் கண்ணாடி பிரேம் போட்டுத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள் இன்னொரு பக்கம்.
பள்ளிவாசல்களின் அலங்காரம் என்ன? பூக்கட்டுக்கள் என்ன? புத்தாடை அணிவது என்ன! நெய்ச்சோறு விநியோகம் என்ன! நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினாரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?
அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள்.
மூஃமின்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக!
நன்றி: வளைகுடா வாசி http://abunoora.blogspot.com/2008/07/1986.html